பிரபல நடிகைக்கு 91- வது வயதில் கிடைத்த மகிழ்ச்சி

இந்த ஆண்டு நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.

பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது.

புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார். சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கணேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

விருது பெற்றது குறித்து சவுகார் ஜானகி கூறுகையில், “தான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். எனது 91-வது பிறந்த நாளுக்கு பிறகு இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version