வாகன வெளிச்சத்தில் தேர்வு எழுதிய பாடசாலை மாணவர்கள்

நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு பீகார் மாநிலத்தில் இடைத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிழக்கு சாம்பரான் மோதிஹாரி நகரில் அமைந்துள்ள மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.

இதற்காக அந்த கல்லூரியில் 400 மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். அங்கே அவர்களுக்கு போதிய வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. மேலும் தேர்வும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின் அவர்களை சமாதானம் செய்த கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத வைத்தது. மதியம் 1.45 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்படிருந்த தேர்வு, மாலை 4 மணிக்குத்தான் தொடங்கியது. 6 மணிக்கு மேல் இருட்டத் தொடங்கியதும் மாணவர்கள் சிரமப்பட தொடங்கினார். மேலும் கல்லூரியில் மின்சார சேவையே இல்லை என்பதும் அப்போது தான் தெரிய வந்தது.

கல்லூரி நிர்வாகம் ஜெனரேட்டர் வசதியை ஏற்பாடு செய்தது. ஆனால் அனைத்து வகுப்புகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. இதனால் பொறுமை இழந்த பெற்றோர்கள் தாங்கள் வந்த வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர்.

தேர்வு முடிந்தவுடன் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த கல்லூரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version