இன்று மதியம் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொலை

இன்று மதியம் 12 – 1 மணிக்கிடையில் யாழில் இந்த கொடூர சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட வீதி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (72) எனும் மூதாட்டியே அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொலையாளி தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மூதாட்டி மாடி வீட்டின் கீழ் தளத்தில் தனித்து வசித்துவரும் நிலையில், மேல் மாடியில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வீட்டிற்கு வேலையாள் வருவார் என கூறி, அயல்வீட்டிலிருந்து கத்தி, கோடாரியென்பன மூதாட்டி வாங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இன்று பகல் 10.30 மணியளவில் பல்கலைகழக மாணவன் ஒருவர் வீட்டுக்கு வந்து போனபோது, மூதாட்டி வீட்டிலிருந்தார். அதன் பின்னர் மதியம் அவர் சடலமாக தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் மூதாட்டி குறிப்பிட்ட வேலையாள் வந்து சென்றாரா, அவர்தான் கொலையை செய்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மூதாட்டி வழக்கமாக கழுத்தில் தங்கச்சங்கிலி அணிவார் என்றும், தற்போது அதை காண முடியவில்லையென்றும் அயலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ள நிலையில் பட்டப்பகலில் இடம்பெற்ற இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version