பறிபோன உயிர்கள்-சடலங்களை மீட்க மின்இணைப்பு துண்டிப்பு

கலென்பிந்துனுவெவ – கெக்கிராவ வீதியில் அதிசொகுசு கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹுருலு வாவியின் இடது கரையில் உள்ள கால்வாயில் கார் வீழ்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் கோமரன்கல்ல பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி ஹுருலு வாவியின் இடது கரையில் உள்ள கால்வாயில் வீழ்ந்துள்ளது.

குடா கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதான லலித் பிரசன்ன வீரசிங்க என்பவரும், 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான டீமன் செனவிரத்ன என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மச்சான் உறவு முறையை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டு விட்டு உறவினர் ஒருவரின் காரில் கலேன்பிந்துனுவெவ நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் காரில் இருந்து வெளியே எடுக்க வீதியின் மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டியதாயிற்று.