எரிபொருள் நிரப்பு நிலையத்தில்29 வயதுடைய இளைஞன் மரணம்

இலங்கையில் ஹொரகொல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாதத்தில் கொழும்பு – 14ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

37 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கொலை செய்துள்ளார். எரிபொருள் நிலையத்தில் அவ் இளைஞருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி இளைஞனை கூர்மையான கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்ற 37 வயதான முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய நிட்டம்புவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியாத பரிதாப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version