மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

தனசேகரன் (வயது 43). இவர் பிரபல நகைச்சுவை நடிகர். இவர் குள்ளமாக இருந்தாலும் இவருடைய நகைச்சுவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்

நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் நடன கலைஞரான இவர் பல நடன குழுக்களில் இணைந்து நடனம் ஆடி வந்தார். குறிப்பாக கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், நாடக கச்சேரிகளில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சந்தோ‌ஷப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனசேகரன் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் உள்ளூர் திருவிழா நடன நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினார். பின்னர் நேற்று காலை சொந்த ஊர் திரும்பினார். தொடர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு படுத்தவர் எழுந்திருக்கவில்லை.

இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மருத்துவர், தனசேகரனை பரிசோதித்து பார்த்தபோது அவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version