தாமதமாக பள்ளிக்கு சென்றதால் தண்டனை கொடுத்த ஆசிரியர் – மயங்கி விழுந்த மாணவிகள்!!

ஒடிசா மாநிலம் போலன்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று சில மாணவிகள் சற்று தாமதமாக வந்தனர். இதையடுத்து அவர்களிடம் ஆசிரியர் பிகாஸ்தரூவ் விசாரணை நடத்தினார்.

அப்போது 7 மாணவிகளை அழைத்து 100 தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கினார். அந்த மாணவிகளும் தோப்புக்கரணம் போட்டனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களால் தோப்புக்கரணம் போட முடியவில்லை.

ஆனாலும், ஆசிரியர் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார். தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டதால் 7 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 7 மாணவிகளும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. இந்த நிலையில் அவர்கள் தோப்புக்கரணம் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாணவிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறித்து ஆசிரியரிடம் விசாரணை நடத்த ஒடிசா மாநில கல்வி மந்திரி சமீர்ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version