பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க

இலங்கை பிரதமரின் புதிய செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

2015-2019 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக இருந்த ஏக்கநாயக்க, இந்த வருடம் நான்காவது தடவையாக பிரதமரின் செயலாளராக பதவியேற்கவுள்ளார்.

ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களில் 30 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள இவர், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும், லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.

Exit mobile version