மோப்ப நாயிடம் சிக்கிய நபர்கள்

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சுமார் 193 பேரை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்கள், மதன மோதக்க போதைப்பொருள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்க்ப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற காவல்துறை மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதைப் பொருட்கள் வைத்திருந்த நபர்களை ஹட்டன் காவல்துறையினர் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும், கடந்த காலங்களில் ஹட்டன் காவல் நிலையத்திலிருந்து கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு தினங்களாக ஹட்டன் கோட்ட உதவி காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலில், விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதற்காக கேரளா கஞ்சாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னலையில் முன்னலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version