இந்திய வீரர் இஷான் கி‌ஷன் வைத்தியசாலையில் அனுமதி

நேற்று தர்மசாலாவில் இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கி‌ஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். போட்டியின்போது 4-வது ஓவரில் அவரது தலையில் பந்து தாக்கியது.

லகீரு குமாரா வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றினார். இந்திய மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது.

இந்த நிலையில் தலையில் பட்ட காயத்துக்காக இஷான் கி‌ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஷான் கி‌ஷன் நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறோம்‘ என்றார்.

இந்த காயம் காரணமாக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் இஷான் கி‌ஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுடன் வெங்கடேஷ் அய்யர் அல்லது மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

Exit mobile version