கனேடிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டமூலம் குறிப்பிட்ட பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் தளங்களுக்கு விலக்கு அளித்து, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும். சிறுவர்களுக்கான உலகின் முதல் சமூக ஊடகத் தடையை அவுஸ்திரேலியா அமுல்படுத்திய சில மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த சட்டமூலம் பாதுகாப்புத் தரநிலைகளை நிறுவுவதற்காக ஒரு டிஜிட்டல் ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒரு அரசு அதிகாரி கூறினார். விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய வருவாயில் 3% அல்லது 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை, அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்.
கனடாவின் அடையாள மற்றும் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டமூலம், இணையவழித் தீங்குகளைக் கையாளும் ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான லிபரல் கட்சியின் அண்மைய முயற்சியாகும். இது நிறைவேற்றப்பட்டால், இணையவழி கொடுமைப்படுத்துதல் உட்பட, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இணையதளங்கள் மீது சுமத்தும்.
நடைமுறையில் இந்தச் சட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தின் நாடாளுமன்ற வழிகாட்டிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
