பிரிட்டனின் மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளரான ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி தொழிற்கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன. அதில் ஆண்டி பர்ன்ஹாம் ஒட்டுமொத்த வாக்குகளில் 55 சதவீதத்தைப் பெற்று அசைக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த வெற்றி தொழிற்கட்சியின் ஆதரவாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆண்டி பர்ன்ஹாமின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேற்று நடைபெற்ற பர்ன்ஹாமின் வெற்றிக் கொண்டாட்ட பேரணியில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், கட்சியில் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பதற்காகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தானாகவே முன்வந்து பதவியிலிருந்து விலகி, அதிகாரத்தை முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என பர்ன்ஹாமின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இந்தச் சவால்களுக்கு மத்தியில் பிரதமர் கீர் ஸ்டார்மர், கட்சிக்குள் எந்தவொரு தலைமைத்துவப் போட்டி வந்தாலும் அதைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் “தான் பதவியை விட்டு விலக போவதில்லை எனவும் ” அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தொழிற்கட்சி எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டும் என்பது குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
