டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் உருவாக்கி வரும் அடுத்த தலைமுறை ஏஐ சிப்களான ‘AI6’, டிசம்பர் மாதத்திற்குள் தனது வடிவமைப்புப் பணிகளை முடித்து ‘டேப்-அவுட்’ நிலையை எட்டும் என்று மஸ்க் தெரிவித்தார்.
‘டேப்-அவுட்’ என்பது ஒரு சிப்பின் வடிவமைப்பில் அதன் வடிவமைப்பு முடிக்கப்பட்டு தொழிற்சாலையில் உற்பத்திக்கு அனுப்பத் தயாராக இருக்கும் இறுதிக்கட்ட நிலையைக் குறிக்கும். தற்போதைய AI5 சிப்களை விட புதிய ‘AI6’ சிப்கள் அதிவேகமாகவும், குறைந்த மின் நுகர்விலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ‘AI6’ சிப்கள் டெஸ்லா கார்களில் உள்ள தானியங்கி ஓட்டுநர் வசதியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்லாவின் மனித உருவிலான ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களின் சிந்திக்கும் திறன் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த சிப்கள் பயன்படுத்தப்பட உள்ளன. என்விடியா போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, டெஸ்லா தனது சொந்த சிப்களைத் தயாரிப்பதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தில் தனித்து விளங்கத் திட்டமிட்டுள்ளது. டிசம்பரில் டேப்-அவுட் முடிந்த பிறகு, 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிப்கள் வாகனங்களில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு டெஸ்லா நிறுவனத்தின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.











































