தெற்காசிய நாடுகளுக்கிடையிலான எறிபந்து சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் ஜூன் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் வாய்ப்பை வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பெற்றுள்ளனர். இவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்ட இரு வீரர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் தற்போதைய மாணவரான நா. நாவேந்தன் ஆவார். மற்றொரு வீரர் கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவருமான எ. ஜெனிஸ்ரன் ஆவார். இவர்கள் இலங்கை தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டது வவுனியா மாவட்டத்தின் விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவைத்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இருந்து இலங்கை தேசிய அணிக்கு இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை வவுனியா மாவட்டத்தின் விளையாட்டுத் துறையில் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த இரு வீரர்களின் தெரிவு வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்க்கிறது.
இந்த இரு வீரர்களின் வெற்றிக்கு அவர்களை வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்களின் பங்கு முக்கியமானது. வி. ஐங்கரதாஸ் மற்றும் சி. சத்தியாராஜ் ஆகிய இரு பயிற்றுவிப்பாளர்கள் தங்களது அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியின் மூலம் இந்த இரு வீரர்களையும் தேசிய மட்டத்திற்கு வழிநடத்தியுள்ளனர்.









































