பிந்திய செய்திகள்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளிப்பாவின் வாழ்வும் பணியும்!

குழந்தையை ஒரு செல்வமாகக் கருதுவது தமிழகத்தின் பண்பு. தம் மக்களே தமது பொருள் என்ற உயரிய எண்ணம் இந்த மண்ணில் ஆழப்பதிந்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு அறிவையும், துணிவையும், அழகிய பண்புகளையும் இளமையில் எளிதாகக் கற்றுத் தருவது குழந்தை இலக்கியமாகும். குழந்தைப் பாடல்கள் வளர்ந்து வரும் படைப்பிலக்கியத் துறையாகும்.

குழந்தைகளுக்குத் தொண்டு செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. “குழந்தை இலக்கியக் கோட்டை” என்று அழைக்கப்படுகிற புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமீஸ்வரஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இப்பள்ளியில் படித்த காலத்தில் தான் அவரது முதல் பாடல் பிறந்தது. குழந்தைக் கவிஞராக நாளை தோன்றப் போவதை, முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சி இந்தப் பள்ளிப் பருவத்தில்தான் நடந்தது.

இராமச்சந்திரப்புரத்தில் முகாமிட்டிருந்த ஒரு டூரிங்க சினிமா கொட்டைகையின் விளம்பரம் “Lost Jungle” என்னும் ஆங்கிலர் பாடலின் பெயரை, “காணாத காடு” என்று தமிழிலும் பெரிய எழுத்தில் அச்சிட்டிருந்தனர். சிறுவன் வள்ளியப்பா “காணாத காடு, கண்டுவிட்டால் ஓடு” என்று உரக்கப் பாடிக் கொண்டே ஒடினாள்.

“காணாத காடு

           கண்டு விட்டால் ஓடு

    எளிய இடம் தேடு

                               ஏழைகள் படுவதோ அரும்பாட

                                     டிக்கெட் விளையோ பெரும்பாடு”

இதுதான் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் முதல் பாடல்.

சென்னைக்குச் சென்று வள்ளியப்பா தி.ஜ.ர. முதலிய எழுத்தாளர்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தி.ஜ.ர. தூண்டுதலினாலும் துணையாலும் எழுத்தாளரானார். “ஆளுக்குப்பாதி” எனும் முதல் கதையை எழுதினார். பின்னர் சிறந்த எழுத்தாளரானார். வள்ளியப்பாவின் சில கட்டுரைத் தொகுப்புகள் “வாழ்க்கை விநோதம்’ என்னும் நூலாக வெளிவந்தன. இந்தக் கட்டுரைகள் எளிய, இனிய நடையில் எழுதப்பெற்றன. பின்னாளில் சிலவற்றைப் பாலர் மலர் என்னும் சிறுவர் இதழில் வெளியிட்டார்.

வள்ளியப்பா திருமணத்துக்குப் பின்னர் இந்தியன் வங்கிப் பணியில் சேர்ந்தார். வங்கி நிகழ்வுகள், தமிழுக்கு மாறிய போது வங்கி இயலின் கலைச் சொற்களுக்கும் சரியான தமிழ்ச் சொற்களைத் தந்து புகழ் பெற்றார். தென்மொழிகள் புத்தக டிரஸ்ட், இவரை டிரஸ்டின், குழந்தை இலக்கியச் சிறப்பு, அலுவலராக நியமித்துக் கொண்டது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழியின் சிறுவர் இலக்கியம் பயன்பெற்றது. 1983-ல் “கோகுலம்” – சிறுவர் மாத இதழின் கௌரவ ஆசிரியராகத் திகழ்ந்தார்.

மலரும் உள்ளம்

1944 -இல் வள்ளியப்பாவின் முதல் நூல் முதல் கவிதைத் தொகுதி “மலரும் உள்ளம்” வெளிவந்தது. இந்நூலில் 23-பாடல்கள் இருந்தன. இதில் 25 படங்கள் இருந்தன. பத்தாண்டுகள் கழித்து 1954-இல் மேலும் பல பாடல்கள் சேர்த்து 135 பாடல்கள் பெரிய தொகுதியை வெளியிட்டாh. அதற்கும் “மலரும் உள்ளம்” என்றே பெயரிட்டார். 1961-ல் 118 புதிய பாடல்கள் கொண்ட மற்றொரு தொகுதியை என்னும் பெயரில் வெளியிட்டார். 1986-இல் மேலும் 110 பாடல்கள் கொண்ட தொகுதியை வெளியிட்டார். “சிரிக்கும் பூக்கள்” என்னும் பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து “விடுகதைப் பாடல்கள்” என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

ஈசாப் கதைப் பாடல்கள், வெளிநாட்டு விடுகதைகள், நேரு தந்த பொம்மை ஆகிய நூல்களும், “பாடடிலே காந்தி கதை” என்னும் சிறுவர் காப்பமும் வெளிவந்தது. “மலரும் உள்ளம்” எனனும் நூலுக்கு கவிமணி வாழ்த்துப் பாக்களை வழங்கிச் சிறப்பித்தார். இன்நூலுக்கு ரா.பி.சேதுபிள்ளை அணிந்துரை வழங்கியுள்ளார்.

“நல்ல கற்பனையும் சிறந்த உணர்ச்சிகளும், உயர்ந்த நோக்கங்களும், குழந்தைகளின் மனத்தில் பதியுமாறு பதியுமாறு பல பாடல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்”- என டாக்டர் மு.வ. அவர்கள் மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதியில் பாராட்டியுள்ளார்.

சிலம்பொலி செல்லப்பன் “சிரிக்கும் பூக்கள்” என்னும் அணிந்துரையில் “படிக்கப் படிக்க நெஞ்சில் சுவையேற்றும் மாத்தொகுப்பே இந்நூல்” என்று போற்றுகிறார்.

குழந்தைப் பாடல்கள் எளிமை, இனிமை, தெளிவு ஆகிய மூன்று பண்புகள் பெற்றிருக்க வேண்டும். வள்ளியப்பாவின் பாடல்களில் இம்மூன்றும் பண்புகளும் காணப்படுகின்றன. பாடலின் சொற்கள் பெரும்பாலும் சீர்சீராக வரும்.

‘லட்டும் தட்டும்’ என்றும் பாடலைப் பெரும்பாலான குழந்தைகள் அபிநயத்தோடு பாடுவதை நாம் பார்க்கலாம்.

“வட்டமான தட்டு

 தட்டு நிறைய லட்டு

 லட்டு மொத்தம் எட்டு

 எட்டில் பாதி விட்டு

 எடுத்தான் மீதி கிட்டு

 பட்டு நான்கு லட்டு

மொத்தம் தீர்ந்த தெட்டு

மீதம் காலித்தட்டு”

            இந்த பாடலில் சிறுவர்கள் லட்டை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும் சிறப்பைப் பார்க்கலாம். இந்த ஓசைப் பாடல் எனக்கு அதிகம் வேண்டும் என்னும் ஆசையை குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருப்பதை காட்டுகிறது.

        “அணிலே அணிலே ஓடிவா

அழகு அணிலே ஓடிவா

கொய்யா மரம் ஏறிவா

             குண்டு பழமம் கொண்மு வா

  ……………………………………

கூடிக் கூடி இருவரும்

                            கோறித்துக் கொறித்துத் தின்னலாம்”

            இந்தப் பாடலில் குழந்தைகள் பறவை, விலங்கு போன்ற உயிர்களை நேசிக்கும் தன்மையும், பகிர்ந்து உண்ணும் பண்பும் விளக்கப்பட்டு இருக்கின்றது.

கிரேக்க ஞானி ஈசாப்பை அறியாத சிறுவரோ, பெரியோரோ இருக்க முடியாது. ஈசாப் கதைகளைக் குழந்தைகளுக்குக் கூற விரும்பிய குழந்தைக் கவிஞர் அவற்றைப் பாடல்களாகத் தந்தார். எளிமையாகவும், பாடல் வடிவிலும் தந்திருக்கிறார்.

“உணவுக்காகத் தொடர்ந்து சென்ற

  எனது ஒட்டத்தால்,

  உயிரைக் காக்க ஓடும் முயலை

                வெல்ல முடியுமோ?” 

            என்னும் இந்தப்பாடல் ‘வித்தியாசம்’ என்னும் கதைப் பாடலாகும். இதில் வேட்டை நாய்க்கும், முயலுக்கும் உள்ள வேறுபாட்டை பாடலாகத் தந்துள்ளார்.

தொல்காப்பியர் சொல்லும் ‘பிசி’ என்பது விடுகதையாகும். கவிஞர் 155 பல நாட்டு விடுகதைகளை, விடுகதையின் மரப்படி பாடல்களாக்கிக் கொடுத்துள்ளார். அந்த நூலின் பெயர் ‘வெளிநாட்டு விடுகதைகள்’.

       “கூரை வீட்டைப் பிரித்தால்

  ஒட்டு வீடு

  ஒட்டு வீட்டைப் பிரித்தா

              வெள்ளை மாளிகை

  வெள்ளை மாளிகைக்கு

  உள்ள குளம்” 

            இது போர்ச்சுகலின் விடுகதை வள்ளியப்பாவின் பாடல்களில் மிகுந்த புகழ் பெற்ற பாடல் வரிகள்,

       “ஏடு தூக்கிப் பள்ளியில்

           இன்று பயிலும் சிறுவரே

               நாடு பயிலும் தலைவராய்

                       நாளை விளங்கப் போகிறார்!” 

                 சிறுவர்களை உயர்ந்த உதவும் பாடல்கள் முக்கிய இடம்  பெறுகின்றன.

கதைகள்

குழந்தை இலக்கியத்தின் முக்கிய கூறு கதை, சிறுகதையும் இதில் அடங்கும். 1949 ஆம் ஆண்டு வள்ளியப்பாவின் முதல்கதை பாட்டிக்குப் போட்டி வெளிவந்தது. ‘குதிரை சவாரி’ ரோஜாச் செடி, நெடுங்கதையும் சிறுவர்களுக்கான பெரிய அளவு நூலாக வண்ணப்படங்களுடன் வெளிவந்தன. ‘பொன்னனின் சுதந்திரம்’ என்னும் சிறுகதை ‘எது சுதந்திரம்?’ என்தைச் சுவையாக விளக்குகிறது. ‘வேட்டை நாய்’ என்னும் பிறமொழிக்கதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுதியும் படைத்துள்ளார்.

கவிஞர் நகைச்சுவையாக ‘அண்டப்புளுகன்’ என்னும் கதையை பாலர் மலரில் – கோமாளி என்னும் புனைப் பெயரில் எழுதினார். பின்னர் இது நூலாக வெளிவந்தது. ‘பர்மாரமணி’ ஒரு சிறுவனின் துன்பக் கதையைச் சொல்வது. ‘நீலா மாலா’ தொடர் கதையாக கோகுலத்தில் வெளிவந்து பின்னர் நூலாகப் புகழ் பெற்றது. கவிஞர் மணிக்குமணி என்னும் ஒரு நாவலை எழுதி உள்ளார். தினமணிக் கதிரில் வெளிவந்தது. இந்த மூன்று நாவல்களும் சிறுவர் நாவல் உலகின் மும்மணிகளாகப் போற்றப்படுகின்றன.

கவிஞர் ஆங்கில மொழியை நன்கு அறிந்தவர். பல ஆங்கிலக் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். இம்மொழி பெயர்ப்பு கதைகள் அனைத்தும் ‘வேட்டைநாய்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. ‘Tales for All times’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிப் பெயர்த்தார். கவிஞர் நாடகங்களையும் எழுதியுள்ளார். ‘வெற்றிக்கு வழி’ என்னும் நாடகம் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். பூஞ்சோலை, கோகுலம் இதழுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.

பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கையில் இருந்து சிறுவர்களுக்கு வழிகாட்டும் சுவையூட்டும் சிறந்த சம்பவங்களைத் தனியே தேர்ந்தெடுத்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதி வந்தார். சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சில பள்ளியில் பாட புத்தகங்களாக வைக்கப்பட்டன. இலங்கை, பர்மா, மலேசியா போன்ற அயல்நாடுகளிலும் இதுபோன்ற நூல்கள் பாடபுத்தகங்களாக வைக்கும் அங்கீகாரத்தைப் பெற்றன.

‘நேருவும் குழந்தைகளும்;’ என்னும் நூல் அருமையான நூல். காவேரி, கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரத, நருமதை, பாலாறு முதலிய தென்னிந்திய நதிகள் பற்றி ‘நம் நதிகள்’ என்னும் தலைப்பில் வள்ளியப்பா மிகச் சிறப்பான முறையில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். ‘மிருகங்கள் பேசினால்’ என்னும் அறிவியல் நூலை குழந்தைகளுக்காக படைத்துள்ளார்.

வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்திலும் பல சாதனைகளைப் புரிந்தார்.1982 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் ஒன்பதாம் றாளில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தை கொடுத்து சிறப்பித்தது.

குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று கூறியவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts