இழுபறியில் இருந்த ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போதே13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாம் எமது வழியில் செல்வோம் என ஜனாதிபதி கோட்டாபய முன் , இரா.சம்பந்தன் மேசையில் அடித்து கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![Gallery](https://cdn.ibcstack.com/article/4d5b0716-b1c0-4f7f-a1ea-df9a6eb79ff6/22-623d9843d58b8.webp)
சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்பு விவகாரங்களில் உடனடி நடவடிக்கையெடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தாக கூறப்படுகின்றது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/61a3b4ab-3c13-4c4e-a08f-6f9e66642fda/22-623d984424a62.webp)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சமல் ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அரச தரப்பில் பேச்சில் கலந்து கொண்டனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/4d5b0716-b1c0-4f7f-a1ea-df9a6eb79ff6/22-623d9843d58b8.webp)
கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இரு தரப்பு கருத்து பகிர்வின் பின்னர், அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை வெளியான பின்னர், கூட்டமைப்பு அதனை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை உத்தேசிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. கூட்டமைப்பினரிடம் நேற்று அரசியல் கைதிகள் விபரம் உறவினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் 48 அரசியல் கைதிகள் 10 வருடங்களிற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
இந்நிலையில் வழக்கு தொடரப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை ஆராய்ந்து, சாதகமான முடிவொன்றை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், வழக்கு தொடரப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விடயத்தை நீதியமைச்சர் அலி சப்ரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூடி ஆராய்வதென்றும், ஒவ்வொருவரின் வழக்கையும் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது வடக்கு, கிழக்கில் இராணுவம் ஒரு பக்கமாகவும், தொல்லியல் திணைக்களம் ஒரு பக்கமாகவும், வனவள திணைக்களம் ஒரு பக்கமாகவும் காணி அபகரிப்பு செய்கிறார்கள், வயல் நிலங்கள், வணக்க தலங்கள், குடியிருப்புக்கள் என பல இடங்களை மக்கள் நுழைய தடைவிதிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
அதன்போது ‘இராணுவத்தினர் காணி சுவீகரிக்கிறார்களா? அவர்களிற்கு எதற்கு காணி?’ என ஜனாதிபதி ஆச்சரியமாக கேள்வியெழுப்பியதுடன், வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
அதோடு உடனடியாக, அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதேவேளை , 13வது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென அமைச்சர்கள் ஜீ.எஸ்.பீரிஸ், அலி சப்ரி கருத்து தெரிவித்தபோது, கோபமடைந்த சம்பந்தன், மேசையில் ஓங்கி இரு முறை அறைந்து, ”13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் எமது வழியில் தனிவழியில் செல்வோம் என கோபமாக கூறியவுடன் ஜனாதிபதி மற்றும் அரச அமைச்சர்கள் சற்று வியந்து பார்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களிற்கு ஒரு லட்சம் ரூபாயை யார் தீர்மானித்தது, அந்த மக்களிற்கு அது தீர்வாகுமா எனக் கேட்ட சம்பந்தன் எனது பிள்ளை காணாமல் ஆக்கப் பட்டிருந்தாலும் இது தான் நிலையா என காட்டமாக வினாவ, நீதி அமைச்சர் அலி சப்றி அவர்கள் இது எமது முடிவல்ல இது ஓ.எம்.பி அலுவலகத்தின் முடிவு எனவும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வது மட்டுமே எனது பணி எனக் கூறி நழுவிச் சென்றார்.
இதனையடுத்து அதில் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கியதுடன், ‘அதை அமுல்ப்படுத்த முடியாதென நாம் சொல்லவில்லை. அதிலுள்ள சில சவால்களையே குறிப்பிட்டோம். நாம் முழுமையான அதிகார பகிர்விற்கு அனைத்து முயற்சிகளும் செய்வோம்’ என தெரிவித்தாராம். இதனையடுத்து இரு தரப்பும் மீண்டும் சந்தித்து பேசுவதென்ற இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு முடிவடைந்ததாக கூறப்படுகின்றது.