பிந்திய செய்திகள்

இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கண்டிப்பாக வலியுறுத்தும் பிரித்தானியா!

பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் விக்கி ஃபோர்ட் இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையின் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான முறைமையொன்றை அணுகவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டங்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து வன்முறைகள் வெடித்தமையில் இருந்து இலங்கையின் நிலைவரம் தொடர்பில் பிரித்தானியா உன்னிப்பாக அவதானம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்றும், அதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் அஹமட் தாரிக் தெளிவாகக் கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்.

எனவே நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையின் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான முறைமையொன்றை அணுகவேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள உள்ள பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்புக் குறித்துத் தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன் பயண வழிகாட்டல்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக அவர்களுடன் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பிரித்தானிய பிரஜைகள் உரிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவுங்கள். பயண வழிகாட்டல் என்பது வெறும் வழிகாட்டல் மட்டுமேயாகும்.

எனவே வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts