பிந்திய செய்திகள்

உலக நாடாளுமன்ற வரலாற்றில்…இலங்கையில் இடம்பெற்ற முதல் கொலை!

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவமானது உலக நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சம்பவமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (31-05-2022) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

அது மாத்திரமின்றி 72 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்குவதற்குக் கூட இடமின்றி அவர்களது வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் மோசமான செயற்பாடாகும். எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழக் கூடிய உரிமை இருக்கிறது.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருப்பிடங்களுக்கு தீ வைக்கப்பட்டமையானது, அந்த உரிமையை மீறும் வகையிலான செயற்பாடாகும். எனவே, இது குறித்து 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் முக்கிய உறுப்புரையொன்று இணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 21 ஆவது திருத்தத்தில் நாட்டில் எந்தவொரு பிரஜையும் வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் எந்தவொரு தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்க, இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts