பிந்திய செய்திகள்

பைரவருக்கு வீட்டில் எப்படி பூஜை செய்தால் நன்மைகள் கிடைக்கும்?

பொதுவாக பைரவர் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பது நியதி. பைரவர் உக்ரமாக இருப்பதால் உக்ர தெய்வங்களை வீட்டில் வைக்கக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது எப்படி வீட்டில் வழிபட முடியும்? என்பதையும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நைவேத்யங்கள் படைப்பது உண்டு. அவ்வகையில் பைரவருக்குரிய நைவேத்தியங்களை படைத்து வணங்குவதன் மூலம் அவருடைய அருளைப் பெற முடியும்.

கோவில்களில் பைரவர் சன்னிதி திறக்கப்படாத நிலையில் அங்கு மலர்களை வைக்கவோ, விளக்கு ஏற்றவோ கட்டாயம் கூடாது. பைரவரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வணங்கலாம்.

பைரவருக்கு ஞாயிற்றுக் கிழமை உகந்ததாக கூறப்படுகிறது. சனி பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். இவரை வணங்கினால் சனிபகவானின் பாதிப்புகளிலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியும். அதனால் சனிக்கிழமையிலும் பைரவரை வணங்கலாம்.

தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள், சனி தசை நடப்பவர்கள், சிவ பக்தர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளிடம் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள், தொழில் மற்றும் வியாபாரம், உத்யோகம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இருக்கும் பாதிப்புகள் நீங்கவும் பைரவரை வணங்கலாம்.

ஞாயிற்றுக் கிழமையில் பைரவருக்கு பிடித்த முந்திரி மாலை மற்றும் செவ்வரளி மலர்கள் சாற்றி பைரவ காயத்ரி மந்திரம் உச்சரித்து அவருக்கு பிடித்த நைவேத்தியங்களை சமர்ப்பித்து வழிபடுவது மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு நல்ல பரிகாரமாகும். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் பைரவரை வணங்க கேட்டதெல்லாம் கிடைக்கும். அஷ்டமி பைரவருக்கு உகந்த திதி.

பைரவரில் 64 வகைகள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அதில் கால பைரவர் மிகவும் சக்தியானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. காலத்திற்கு நமக்கு உதவி செய்ய ஓடோடி வருவதாக காலபைரவர் புராணம் கூறுகிறது. அதாவது கூப்பிட்ட குரலுக்கு தக்க சமயத்தில், வேண்டிய நேரத்தில் உதவி செய்யவும் காலபைரவரை அழைக்கலாம் என்பது அதில் கூறப்பட்டுள்ள தகவல் ஆகும்.

கால பைரவருக்கு நைவேத்தியம் படைக்க பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீரை கொண்டு சாதம் கலந்து தயாரிக்கலாம். வெண்பூசணியால் செய்த உணவும் பைரவருக்கு பிரியமானது. எலுமிச்சை சாதமும் நைவேத்தியமாக படைத்து பைரவரை வழிபடலாம்.

பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் பைரவருக்கு நாணய அர்ச்சனை செய்வது வழக்கமாகும். குபேர பகவானுக்கு எப்படி ஐந்து ரூபாய் நாணயங்களை அர்ச்சனை செய்கிறார்களோ! அதே போல் பைரவருக்கு 108 ஒரு ரூபாய் நாணயங்களை அர்ச்சனை செய்வது விசேஷம் ஆகும். இவருக்கு நாணய அர்ச்சனைகள் செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீட்கலாம். பொலிவிழந்த வியாபாரம் மற்றும் தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம்.

இவரை வீட்டில் வணங்குவதற்கு நீங்கள் விளக்கு வைக்கும் நேரத்தில் 7 அகல் தீபங்களை வாசலில் வைத்து உங்களுடைய அன்றாட பூஜையில் அவருக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து பைரவரின் வாகனமாக விளங்கும் நாய்களுக்கு உணவளிக்கலாம்.

உங்களால் முடிந்தால் ஏழை எளியவர்களை அழைத்து அன்னதானம் செய்யலாம். இவ்வாறு செய்ய பைரவர் உடைய படம் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே உங்களுக்கு பைரவர் உடைய அருள் கிடைத்து விடுவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts