பிந்திய செய்திகள்

சா‌‌மி ‌சிலைகளு‌க்கு அ‌பிஷேக‌ம் செ‌ய்வது இதற்காகத்தான்…!

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன?

சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் என்றெல்லாம் உண்டு.

அலி கல் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது. பதுமை செய்வது போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே இந்த அலி கல்லைப் பயன்படுத்துவார்கள்.

ஆண் கல்தான் முக்கியமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கற்களுக்கு செதுக்கி செதுக்கி உயிரூட்டம் கொடுக்கிறார்கள். இந்தக் கற்கள் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு வஸ்து. இதற்கு இயற்கையோடு இயற்கை, கல் என்பதும் இயற்கை, தர்பை என்பதும் இயற்கை.

இந்த தர்பையால்தான் கும்பாபிஷேகத்தின் போது இறைவனுடைய சிற்பத்தைத் தீண்டுகிறோம். அதன்மூலம் அதற்கு ஒரு உயிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறோம்.

இதேபோல அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனுடைய அழைப்பு கூடுகிறது. பால் அபிஷேயம் என்றால் ஒரு அழைப்பு, தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு.

பொதுவாக இறைவனை எவ்வாறு பார்க்கிறோம். சில நேரம் நண்பனாகப் பார்க்கிறோம், சில நேரத்தில் தாய், தந்தையாக நேசிக்கிறோம்.

அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்துவிட்டு நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம்.

ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும்.

ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோயில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

இந்த திரவியங்கள் எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் உள்ளது.

சிலைகளுக்கு ஏன் இப்படி விதவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும்?

அதற்கு முக்கியமான காரணம்.

ஒரு கோயிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும்.

இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா? சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே? அப்படித்தான் இறையருளை மந்திர, யந்திர ஸ்தாபனங்கள் மூலம் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் அபிஷேகம் முதலானவை அவசியமாகிறது.

இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் கண்டுபிடித்துவிட்டனர். எனவேதான் கோயில்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்துப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதோடு அபிஷேகப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க கைங்கர்யம் செய்வதற்கு வசதியாக கோயில் சொத்தாக நிலங்களை எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.

அதேபோல எந்த வகை அபிஷேகம் செய்தாலும் அதனை ஒரு நாழிகை, அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சில கோயில்களில் அவற்றின் நடைமுறை வழக்கப்படி இரு நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. இது, ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிலை பிரதிஷ்டை பந்தன விதிகளை ஒட்டி மாறுபடுவதும் உண்டு.

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து வாசனைதீர்த்தமாக அபிஷேகம் செய்வது சிறந்தது.

முற்காலத்தில் மூலவிக்ரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகங்களுள் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றைத் தவிர மற்றவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்கள்.

ஆகமப்படி இவை தவிர மற்ற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்கக்கூடாது. என்றாலும் பல கோயில்களில் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

கருவறையில் கற்சிலையாகக் காட்சிதரும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே ஈர்த்து அதைக் கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.

அந்த ஆற்றலானது அபிஷேகம் செய்வதால் பலமடங்கு அதிகரிக்கிறது.

நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த இந்த உண்மையை, இன்றைய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

பழமையான கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், ஆற்றல் வாய்ந்த மந்திரத் தகடும் (யந்திரம்) பதிக்கப்பட்டு உள்ளன.

இந்த யந்திரமும், மூலிகைகளும் வெளிப்படுத்தும் ஆற்றலும் அபிஷேகத் தீர்த்தத்தில் கலக்கிறது.

அதனால்தான் அதனைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் சிறிதளவு உட்கொண்டாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றது.

அபிஷேகம் செய்யச் செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர்மின்னூட்டியின் அளவு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும்.

ஈரப்பதத்தில் ஒளியின்வேகம் அதிகமாக இருக்கும்.

அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருவதாகவும்.

அது கோயில் முழுதும் பரவி, பக்தர்கள் மனதில் பக்தி உணர்வினை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள்.

அபிஷேகத்தின் போது சொல்லப்படும் மந்திர ஒலி, சிலை மீது பட்டு நேர் அயனியாக வெளிப்படுகிறது.

நேர் அயனியை சிவமாகவும், எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தி ஐக்கிய பாவத்திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.
அந்த ஆற்றல் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கருவறையில் இருந்து கோமுகம் வழியே சென்று, பின் அபிஷேக திரவியங்கள் நேராக கோயில் திருக்குளத்தை சென்றடைய வழிவகை செய்திருந்தனர்.

அதுபோலவே அபிஷேகத்துக்கு உரிய பொருளை நேரடியாக எடுத்துவந்து தருவதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் வந்து பின்னர் கொடுப்பதே நல்லது என்பதால்தான், பால் காவடி முதலானவற்றைச் சுமந்துவருபவர்கள் கோயிலை வலம் வந்து அளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு.

அதனாலேயே எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

பால் அபிஷேகம் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்குச் செய்யப்படும்போது அது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல முருகனுக்குத் திருநீறு, பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்போது அளவுகடந்த ஆற்றல் வெளிப்படுகிறது.

அதன் காரணமாக பக்தர்கள் வாழ்க்கையில் செழுமையும் நலமும் நிறைகிறது.

ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோயில்களுக்குச் செல்லுங்கள்.
நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை.

கோயிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும்.

அபிஷேகம் செய்யும் முறை வரிசை படி : சந்தனாதி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், வாசனை திரவியம், அரிசி மாவு, மஞ்சள் பொடி, குங்குமம், சர்க்கரை, தேன் தேனை அதிகமாக பயன்படுத்த கூடாது, பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, எலுமிச்சை சாறு, சாத்துக்குடி, இளநீர், சொர்ணம் சாத்தி சந்தனம், பன்னீர், பிறகு கலச ஜலம். இது தான் சரியான முறை. இப்படி தான் செய்ய வேண்டும். நம் இஷ்டத்திற்கு செய்ய கூடாது. அதே போல் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த பாலை நாம் அருந்த கூடாது.

சந்தனம், பஞ்சாமிர்தம் இவைகள் மட்டுமே நாம் அருந்தலாம். அதே போல் எல்லா அபிஷேக சாமான்களையும் நாம் கைகளால் கரைக்கின்றோம் அப்படி கைகலே படாமல் ஒன்று இருக்குமாயின் அது இளநீர் மட்டுமே. அதை நம் கை வழியாக அபிஷேகம் செய்ய கூடாது. நேராக கைகளில் படாமல் ஊற்ற வேண்டும். எந்த அபிஷேகமும் நம் கை வழியாக நகத்தின் மீது பட்டு ஸ்வாமி மீது விழ கூடாது. இளநீர் மட்டுமே மிகவும் விசேஷமான ஒன்று. அதை பற்றி தற்போது பார்க்கலாம். தெண்ணை மரத்தில் விடும் பூவில் ஒரு சொட்டு நீர் கூட எடுக்க முடியாது. அதே போல் குரும்பையிலும் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. பிறகு குரும்பை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும். அதனுள்ளே எப்படி ஓடு உருவாகிறது ஓட்டுக்குள்ளே எப்படி தண்ணீர் வருகிறது,

அதற்குள்ளே எப்படி வழுக்கை வருகிறது, வழுக்கை பெரிதாகி தேங்காய் ஆகிறது. அந்த தேங்காய் குள்ளும் சில காலம் வற்றாமல் இருக்கும் நீர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கடைசியில் கொப்பரை வரை நாம் யாகத்தில் சேர்ப்பது வரை புனிதமாக கருதப்படுகிறது. அப்பேர் பட்ட இளநீரை நம் கைகளில் ஊற்றி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய கூடாது. அதனால் தான் இளநீர் மிகவும் விசேஷமான ஒன்று. இதை எல்லாம் இன்று சொல்வதற்கு ஆட்கள் மிகவும் குறைவு. அப்படி நாம் சொன்னாலும் அவர் கேட்பது இல்லை என்பதே வருத்தமான விஷயம்.

தேன் எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ அதே போல் நூறு மடங்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். தேன் உஷ்ணம். அதனால் தேனை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதே இறைவனின் சூட்டை தனிப்பதற்கே.

மேலே சொன்னதில் அரிசி மாவு, மஞ்சள் பொடி, குங்குமம், சர்க்கரை, விபூதி போன்றவைகள் பயன்படுத்த வில்லை என்றால் இவைகளை தவிர்த்து வரிசை படி செய்யலாம்.

இது நிறைய நியாயமான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று தான் அடியேனுக்கு ஆசை. ஆனால் சிலரின் பேச்சு, செயல் படும் முறை அவர்கள் தவராக நினைக்கின்றார்கள். பதிவு செய்தாலே அவர்களை பற்றி தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறார்கள். அதனாலே நிறைய எழுதாமல் நிலைக்கு சில சமயம் தள்ளப்படுவதும் உண்டு.

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :


சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும்,

மணம் உள்ள தைலம் – சுகம் தரும்,

பஞ்சகவ்யம் – பாவத்தைப் போக்கும்,

பஞ்சாமிர்தம் – செழிப்பினைத் தரும்,

நெய் – மோக்ஷம் அளிக்கும்,

பால் – வாழ்நாள் வளர்ச்சி,

தயிர் – மக்கட் செல்வம் தரும்,

மாப்பொடி – கடன் ஆரோக்கியம் அளிக்கும்,

தேன் – சுகம் தரும்,

பழபஞ்சாமிர்தம் – செல்வங்கள் பெருகும்,

வாழைப்பழம் – பயிர் செழிக்கும்,

பல்லவம் – உலகை வயப்படுத்தும்,

மாம்பழம் – மகனுக்குச் சீர் சேர்க்கும்,

மாதுளை – கோபத்தை நீக்கும்,

கொளஞ்சி நாரத்தை – சோகத்தைப் போக்கும்,

நாரத்தை – ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,

எலுமிச்சை – மரணபயம் நீக்கும்,

சர்க்கரை – பகை களையும்,

இளநீர் – இன்பங்கள் நல்கும்,

அன்னாபிஷேகம் – நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,

சந்தனக் குழம்பு – தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் இரு வகை :

(1) ரஸ பஞ்சாமிர்தம் – ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2) பல (பழ) பஞ்சாமிருதம் – மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா – ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts